for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

26 Nov 2021 காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் படுகொலைக்கு கண்டனம் People's Watch in Media Madurai

கடந்த 21.11.2021அன்று ஆடு திருடிய கும்பலை விரட்டிப் பிடித்த நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அக்கும்பலால் பட்டப்பகலில் பொது வெளியில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் வன்மையான கண்டனத்திற்குரியதாகும். சிறாராக இருந்தாலும், இளைஞராக இருந்தாலும் வன்முறையைப் பயன்படுத்துவது, அதிலும் கொலைக் குற்றத்தில் ஈடுபடுவது சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாட்டில் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல, நியாயத்திற்குப் புறம்பானது ஆகும். எந்தப் பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல என்பதில் முழு நம்பிக்கை கொண்ட குடிமைச் சமூகமும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இத்தகைய வன்முறையை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள்.  காவல் வன்முறைக்கு எதிராகச் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு களப்பணியாற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் காவல்துறையினர் மீது நடத்தப்பெறும் வன்முறையையும் கண்டிக்க ஒரு போதும் தவறியதில்லை; தவறவும் மாட்டோம். இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 இன் படி அனைத்து மக்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படுதல் கூடாது. அனைத்து மக்கள் என்பதில் காவல்துறையினரும் அடங்குவர். அனைவரின் வாழ்வுரிமையும் பாதுக்காக்கபெற வேண்டும். இது எவர்க்கும் மறுக்கப்படக் கூடாது. ஒருவர் உயிரைப் பறிக்க எவர்க்கும் அதிகாரமில்லை. இது போன்ற கொடூர குற்றங்கள் செய்வோர்க்கு எதிராக விரைவான, முறையான, தரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குறுகிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விரைவான தீர்ப்பு வழங்கப்பெற வேண்டுமென மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகிறது.  திருட்டுக் கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக இழப்பீடு கொடுத்துள்ளது. அதே நேரத்தில் நீதியும் கிடைக்கச் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விரைவாக அளிக்கப்பட வேண்டும்.  குறிப்பாக மரணத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தும் வன்முறைக் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறுவதைத் தவிர்க்க வேண்டும். மலேசிய நாட்டில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் திரையிடப்படும் தமிழ்ப் படங்களில் வன்முறைக் காட்சிகளைத் துண்டித்து வெளியிட்டுத் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஆயுதக் கலாச்சாரமும் வன்முறையும் பொருந்தாது என்பதை இன்று வரை நிறுவி வருகிறார்கள். இதன் மூலம் தமிழர்களின் பண்புகளை, வாழ்வியல் நெறிமுறைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுத்து மனித குலத்திற்கு எடுத்துரைக்கிறார்கள்.  இது போன்ற வன்முறைகளை மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கண்டிப்பதில்லை என்று கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது ஆகும். வன்முறை யார் மீது நிகழ்த்தப்பெற்றாலும் அதை மனித உரிமை அமைப்புகள் ஒரு போதும் கண்டிக்கத் தவறியதில்லை. வன்முறையை யார் பயன்படுத்தினாலும் அது வன்முறை தான், வன்முறையாளர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபெற வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது.  - ஹென்றி திபேன், நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்

#media
26 Nov 2021 'மீனவர் ராஜ்கிரண் உடலில் காயங்கள் இல்லை...' -நீதிமன்றத்தில் மனுதாரர் தகவல்! People's Watch in Media Pudukottai

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் உயிரிழப்பில் அவரது உடலில் காயங்கள் இல்லை என  உயர்நீதிமன்றத்தில் அவரது மனைவி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரண் சக மீனவர்களுடன் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாகக் கிட்டத்தட்ட ஐந்து நாள் போராட்டத்திற்குப் பிறகு மீனவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னுடைய கணவன் இலங்கைப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்துள்ளார். எனவே அவரது உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. “துப்பாக்கியால் சுடப்பட்டு அவர் உயிரிழந்திருந்தால் அதனை சும்மா விட முடியாது” எனவும் நீதிமன்றம் தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த 18 ஆம் தேதி மீனவர் ராஜ்கிரணின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு மறு பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் இலங்கை கடற்படையினர் கப்பல் இடித்து மீனவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில் மீனவர் ராஜ்கிரண் உடலில் காயங்கள் இல்லை என உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்திருந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ராஜ்கிரணின் உடல் முதல் உடற்கூறாய்வுக்கு பிறகு தைக்கப்படாமலும், உடை அணிவிக்கப்படாமலும் இருந்தது என்ற தகவலும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசை தாமாக முன்வந்து சேர்ப்பதாகவும், அதற்கான நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

#media
22 Nov 2021 Withdraw cases booked against farmers: forum People's Watch in Media Madurai

#media
20 Nov 2021 Madras High Court Bats For Mental Health Screening Of Arrestees/ Accused For Remand People's Watch in Media Madurai

The Madurai Bench of Madras High Court has recently underlined how police, prison authorities and remanding magistrates must deal with arrestees/ / prisoners who are persons with mental illness (PMIs). The expression 'every person' in Article 21 comprises...

#media
19 Nov 2021 `இலங்கை கடற்படையினரால் சடலமாக மீட்கப்பட்ட மீனவர்?!' - நீதிமன்ற உத்தரவின் பேரில் உடல் மறு கூறாய்வு! People's Watch in Media Chennai

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து அக்டோபர் 18-ம் தேதி, சுரேஷ்குமார் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சுகந்தன், சேவியர், ராஜ்கிரண் ஆகிய மூன்று மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். 19-ம் தேதி 17 மைல் நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, மீனவர்களின் படகை இடித்துச் சேதப்படுத்தியதில் விசைப்படகு நடுக்கடலில் மூழ்கியது. இதில், மீனவர் ராஜ்கிரண் மாயமானார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், நெடுந்தீவு அருகே கடந்த மாதம் 20-ம் தேதி மீனவர் ராஜ்கிரணை இலங்கை கடற்படையினர் சடலமாக மீட்டனர். மீனவர் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராஜ்கிரணின் உறவினர்கள் அவர் கடலில் மூழ்கி இறக்கவில்லை. இலங்கை ராணுவத்தால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்று குற்றம்சாட்டினர். மேலும், அவரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள். இதற்கிடையே, கடந்த மாதம் 23-ம் தேதி ராஜ்கிரணின் உடலை இலங்கை கடற்படையினர், இலங்கையில் உடல் கூறாய்வு செய்துவிட்டு, கோட்டைப்பட்டினத்துக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து, அவர் உடல் மறு உடல் கூறாய்வு செய்யப்படாமல் கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இறந்த ராஜ்கிரணின் மனைவி பிருந்தா, தன் கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ராஜ்கிரணின் உடலை மறு உடல் கூறாய்வு செய்ய வேண்டும் என, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜ்கிரண் கடலில் மூழ்கி இறந்தாரா அல்லது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இறந்தாரா என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில், நவம்பர் 18-ம் தேதி ராஜ்கிரணின் பிரேதத்தை மறு உடல் கூறாய்வு செய்து, அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் வரும் 24-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன்பேரில் நேற்றிரவு, ஓய்வுபெற்ற தடயவியல்துறை பேராசிரியர் சேவியர் செல்வ சுரேஷ், மணமேல்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மணமேல்குடி வட்டாட்சியர் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் முன்னிலையில் ராஜ்கிரணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. அதையடுத்து, மீண்டும் ராஜ்கிரணின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

#media
19 Nov 2021 நீதிமன்ற உத்தரவுப்படி உயிரிழந்த மீனவா்சடலம் மறுஉடற்கூறாய்வு People's Watch in Media Madurai

இலங்கை கடற்படைப் படகு மோதி உயிரிழந்த மீனவா் ராஜ்கிரணின் சடலம் நீதிமன்ற உத்தரவின்படி தோண்டி எடுக்கப்பட்டு வியாழக்கிழமை மறுஉடற்கூறாய்வு செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சோ்ந்த மீனவா்ள் ஆா்.ராஜ்கிரண் (30), எஸ். சுகந்தன் (30), ஏ. சேவியா் (32) ஆகியோா் அண்மையில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினா் தங்களது ரோந்து படகு மூலம் இடித்தனா். இதில், மீனவா்களின் படகு கடலில் மூழ்கியது. கடலில் தத்தளித்த சுகந்தன், சேவியா் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். இரு நாட்களுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அக்.23ஆம் தேதி இலங்கையில் இருந்து ராஜ்கிரணின் உடல் கடல் வழியாகக் கொண்டு வரப்பட்டு கோட்டைப்பட்டினத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜ்கிரணின் உடலில் காயம் இருப்பதால் இலங்கைக் கடற்படை அவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், அதனால் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் மறுஉடற்கூறாய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீனவா் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா மனு தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், மீனவா் ராஜ்கிரணின் உடலைத் தோண்டி எடுத்து மறுகூறாய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தாா். அதன்படி, மணமேல்குடி வட்டாட்சியா் ராஜா முன்னிலையில் வியாழக்கிழமை தோண்டி எடுக்கப்பட்ட சடலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு தடயவியல் துறை மருத்துவா்கள் தமிழ்மணி, சரவணன் ஆகியோா் மறு உடற்கூறாய்வை மேற்கொண்டனா். சுமாா் இரண்டு மணிநேரத்தில் உடல் மீண்டும் வருவாய்த் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, கோட்டைப்பட்டினம் கொண்டு செல்லப்பட்டு அதே இடத்தில் புதைக்கப்பட்டது. உடற்கூறாய்வு அறிக்கை வரும் 24ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது

#media
19 Nov 2021 Re-post mortem of Pudukai fisher done People's Watch in Media Trichy

The body of a fisherman from Pudukkottai was exhumed on Thursday for re-post mortem as per the direction of the Madurai Bench of Madras High Court after the wife of the deceased raised suspicion over the cause of death....

#media
19 Nov 2021 ராமதாஸ் செய்வது அசிங்கமான அரசியல்.. ஸ்டாலின் வேடிக்கை பார்க்க கூடாது.. மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் People's Watch in Media Chennai

தமிழகத்தில் கொடூர வன்முறையை தூண்டும் வகையில் பாமக பேசி வருகிறது, இதை தமிழக முதலமைச்சர் வேடிக்கை பார்க்கக் கூடாது, இது சமூக நீதி மண், பெரியார் மண் என்பதை அவர் காட்ட வேண்டுமென மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன் கூறியுள்ளார். வேறு அரசியல் இல்லை என்பதற்காக பாமக இந்த அராஜக அரசியலை கையில் எடுத்து இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.  இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர் ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அத்துடன் 5 கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் பாமக வழக்கு தொடுத்துள்ளது. நாளுக்கு நாள் சூர்யா-- பாமக மோதல் அதிகரித்து வரும் நிலையில் இதில் அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக மக்கள் கண்காணிப்பகள் ஹென்றி டிபேன் பேட்டி கொடுத்துள்ளார். அதில்,  சூர்யா நடித்து தயாரித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் காவல்துறையின் சித்திரவதைகளுக்கு எதிராக குரல், ஜெய்பீம் என்பது சாதிய பாகுபாட்டுக்கு எதிரான குரல், ஜெய் பீம் என்பது அனைவரையும் ஒன்றிணைக்கக் கூடிய குரலாக இந்த படத்தின் மூலம் ஒலித்திருக்கிறது. ஒரு காலத்தில் தலித் மக்கள் மட்டும் பயன்படுத்தி வந்த ஜெய்பீம் என்ற வார்த்தை தற்போது அனைத்து மக்களுக்குமானதாக மாறியுள்ளது. இந்த படத்தை பார்த்தவுடன் என் கண்கள் குளமாகி விட்டது. இதனால் சூர்யா மற்றும் அவரது படக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் பார்க்க வேண்டிய படம், வழக்கறிஞர்கள் பார்க்க வேண்டிய படம், நீதிபதிகள் பார்க்க வேண்டிய படம், அதிலும் குறிப்பாக அரசு வழக்கறிஞர்கள் பார்க்க வேண்டிய படம், காவல்துறை அதிகாரிகள் பார்க்க வேண்டிய படம். இப்படிப்பட்ட படத்தை வைத்து பாமக அரசியல் செய்து வருகிறது. ஒரு காலத்திற்காக சமூக நீதிக்காக குரல் கொடுத்தவர், அதற்காக கட்சி ஆரம்பித்தவர் மருத்துவர் ராமதாஸ், நான் மறுத்து ராமதாசை நேசித்தவன். அவரை மதித்தவன். பாமகவினர் பல விஷயங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள். வன்னியர்களுக்காக மட்டும் அவர் பேசவில்லை, கல்வி சார்ந்த விஷயங்களுக்கும், சமூக சார்ந்த விஷயங்களுக்கும் அவர்கள் பேசியிருக்கிறார்கள். அதையெல்லாம் நாங்கள் மறுக்கவில்லை ஆனால் இன்று அவர்கள் கட்சியை சார்ந்தவர்கள் சூர்யாவின் தாக்குவோம் என்று பேசுகிறார்கள் அதற்கு முதல்  கண்டனக்குரல்  மருத்துவர் ராமதாசிடமிருந்து வந்திருக்க வேண்டும். அப்படி வரவில்லை என்பது தான் என்னுடைய ஆதங்கம். இன்னும் கூட காலம் தாழ்ந்து விடவில்லை அவர் இப்போதும் குரல் கொடுக்கலாம், அதே நேரத்தில் வேறு அரசியல் செய்ய காரணமில்லை என்பதால் தற்போது பாமக எடுத்துள்ள இந்த அரசியல் அசிங்கமான அரசியல். ஒரு தலித் இப்படி பேசியிருந்தால் அல்லது ஒரு பெரியாரிஸ்ட் இப்படி பேசி இருந்தால் இந்த காவல்துறை வேடிக்கை பார்த்து இருக்குமா? சூர்யாவை எட்டி உதைத்தால் பரிசு தருவோம் என்ற நபரை உடனே கைது செய்திருக்க வேண்டாமா? பாமகவின் இந்த வன்முறை அரசியலை தமிழக அரசு வேடிக்கை பார்க்க கூடாது, முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்க கூடாது, வழக்கு மட்டும் போடுகிற விஷயம் அல்ல இது, இப்படிப்பட்டவர்களை உடனே தூக்கி உள்ளே வைத்திருக்க வேண்டும். இது சமூக நீதி மண், இது பெரியார் மண் என்பதை முதல்வர் ஸ்டாலின் காட்ட வேண்டும். தமிழகமே போற்றிக் கொண்டிருக்கும் இந்த ஜெய் பீம் திரைப்படத்தை வைத்து பிரச்சினை செய்ய வேண்டாம் என பாமகவை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

#media


Join us for our cause