for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

People's Watch in Media

30 Dec 2017 ஒக்கி புயல் குறித்து மக்களுக்கு முன் எச்சரிக்கை கொடுக்கவில்லை என்று உண்மை கண்டறியும் குழுவினர்கூறினார்கள் People's Watch in Media Nagercoil, Tamil Nadu

குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய உண்மை கண்டறியும் குழு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இந்த குழுவின் தலைவராக கொடிக்கால் ஷேக் அப்துல்லா தலைவராக செயல்படுகிறார். ஓய்வு பெற்ற நீதிபதி கோல்சே பாட்டீல், பேராசிரியர் ஷிவ் விஸ்வநாதன், ஐ.நா. சர்வதேச விசாரணை ஆணைய முன்னாள் செயலாளர் ரவீந்திரன், தமிழ்நாடு பெண்கள் ஆணைய முன்னாள் தலைவர் ராமாத்தாள், ஓய்வு பெற்ற முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. நாஞ்சில் குமரன், பேராசிரியர் காந்திதாஸ், ஐ.நா. வளர்ச்சித்திட்ட முன்னாள் தலைவர் ஜாண் சாமுவேல் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த உண்மை கண்டறியும் குழுவினர் குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த 2 நாட்களாக நேரில் ஆய்வு செய்தனர். இந்தநிலையில் நேற்று நாகர்கோவிலில் இந்த குழுவைச் சேர்ந்த கொடிக்கால் ஷேக் அப்துல்லா, ஓய்வுபெற்ற நீதிபதி கோல்சே பாட்டீல், ராமாத்தாள் உள்ளிட்டோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:– குமரி மாவட்டத்தில் நாங்கள் 2 நாட்கள் நடத்திய ஆய்வில் மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை முறையாக செயல்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. முறையான தகவல் பரிமாற்றம் இருந்திருந்தால் ஏராளமான உயிர்களை காப்பாற்றி இருக்க முடியும். ‘ஒகி‘ புயல் குறித்து குமரி மாவட்ட மக்களுக்கு முறையான அறிவிப்போ, முன் எச்சரிக்கையோ கொடுக்கவில்லை. முழுக்க, முழுக்க மத்திய– மாநில அரசுகளின் தவறு காரணமாகவே மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. மீட்பு பணிகளும் சரியாக செய்யப்படவில்லை. காலம் தாழ்ந்து அரசு செயல்பட்டிருக்கிறது. புயலால் எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற முழுமையான விவரம்கூட அரசிடம் இல்லை. விவசாயிகள், மீனவர்களை நேரடியாக சந்திக்கும்போது அவர்கள் கூறுவதுபோல் சேத மதிப்பு அளவிட முடியாததாக இருக்கிறது. மிகப்பெரிய பேரிழப்பை குமரி மாவட்டம் சந்தித்திருக்கிறது. மத்திய அரசு தங்களிடம் உள்ள கப்பல்களையும், விமானங்களையும் உடனடியாக தேடுதல் வேட்டைக்கு பயன்படுத்தி இருந்தால் காணாமல் போன மீனவர்களை உயிருடன் மீட்டிருக்க முடியும். புயல் ஏற்பட்டபோது மாவட்ட நிர்வாகம் செயல் இழந்த நிலையில்தான் இருந்து இருக்கிறது. மீனவர்கள் தரப்பில் இருந்து ஜி.பி.எஸ். கருவி மூலம் 32 இடங்களை அடையாளம் காட்டி அந்த இடங்களில் தேட வலியுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் அந்த இடத்தில் முறையாக தேடுதல் நடத்தப்படவில்லை. வாழை, ரப்பர் சேதத்துக்கு விவசாயிகளுக்கு குறைந்த அளவு இழப்பீடு அறிவிக்கப்பட்டு இருப்பது வெறும் கண்துடைப்பாக இருக்கிறது. மத்திய அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பேரிடர் மேலாண்மையில் உறுப்பினர் எண்ணிக்கையை பாதியாக குறைந்தது. இதன் காரணமாகவே முறையாக ஒருங்கிணைப்பு இல்லாமல் மனித உயிர்கள் பலியாகி இருக்கிறது. கடற்படையையும், விமானப்படையையும் தொடர்புகொண்டு கேட்டபோது மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து முறையான தகவல் வந்துசேரவில்லை என்று கூறுகின்றனர். ஏற்கனவே சுனாமி மிகப்பெரிய பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது. இப்போது ஒகி புயல் மிகப்பெரிய பேரிழப்பை சந்திக்க வைத்துள்ளது. இனியாவது மத்திய, மாநில அரசுகள் பேரிடர் மேலாண்மை முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் 2 நாட்களாக மேற்கொண்ட ஆய்வு அறிக்கையை வருகிற 8–ந் தேதி காலை 10 மணிக்கு நாகர்கோவிலிலும், மாலை 6 மணிக்கு தூத்தூரிலும் வெளியிடுகிறோம். மத்திய மாநில அரசுகளுக்கு வழங்கும் தேதியும், ஐ.நா. சபையிடம் தாக்கல் செய்யும் தேதியும் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

#CycloneOckhi, #OckhiCyclone, #Kanyakumari, #PeoplesInquest
14 Dec 2017 "மரணதண்டனையால் குற்றம் குறைந்து விடாது..!" மனித உரிமை ஆர்வலர்கள் People's Watch in Media

உடுமலை சங்கர் கொலை வழக்கில் திருப்பூர் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனைக்கான தீர்ப்பை மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் எதிர்த்து வருகின்றனர்.  ...

#HonourKilling, #PeoplesWatch, #HenriTiphagne
14 Dec 2017 "மரணதண்டனையால் குற்றம் குறைந்து விடாது..!" மனித உரிமை ஆர்வலர்கள் People's Watch in Media Chennai, Tamil Nadu

உடுமலை சங்கர் கொலை வழக்கில் திருப்பூர் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனைக்கான தீர்ப்பை மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் எதிர்த்து வருகின்றனர்.  நீதி என்பது அனைவருக்கும் பொதுவானது. அது சமமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களது குரலாக ஒலிக்கத்தொடங்கியுள்ளன. அதற்கு காரணம் என்கவுன்டர், மரண தண்டனை போன்றவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்களே உடுமலைசங்கர் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்காரணமாக இந்தத் திர்ப்பு சாதிய ரீதியில் அணுகப்படுவதாக ஒரு சாரார் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். அதற்கு உதாரணமாக பேரறிவாளன் நளினி உள்ளிட்டோரின் மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள். கௌசல்யா - சங்கர் இருவரும் கடந்த 2016 மார்ச் மாதம் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். இவர்கள் இருவரும் உடுமலைக்கு வந்தபோது பட்டப்பகலில் ஒரு கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சங்கர். கௌசல்யா படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.  சங்கர் படுகொலை தொடர்பாக வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டதற்காக, கௌசல்யாவின் பெற்றோர்களே கூலிப்படைவைத்து சங்கரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாய் அன்னலட்சுமி கௌசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் என்கிற மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ்க் கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகிய 11 பேரை போலீஸார் கைது செய்தனர். திருப்பூர் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், 6 பேருக்குத் தூக்குத் தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை உள்ளிட்ட  மூன்று பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதுகுறித்து மனித உரிமை ஆர்வலர்களிடம் பேசினோம். ‘‘சங்கரை படுகொலை செய்தது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களைக்  கடுமையாக தண்டிக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அதற்கு மரண தண்டனை என்பதை ஏற்க முடியாது’’ என்கிறார் மனித உரிமை ஆர்வலர் மார்க்ஸ் மேலும் தொடர்ந்தவர், “இந்தக் குற்றங்களுக்கு மரண தண்டனை ஒழிக்க வேண்டும். இதற்கு ஒழிக்கத் தேவையில்லை என்று எதுவும் வரையறுப்பதில்லை... குறிப்பாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை கூடாது என்று அனைவருமே போராடி வருகிறோம். இந்தப் பிரச்னையில் அவர்கள் குற்றவாளிகளா? குற்றவாளிகள் இல்லையா என்பது பிரச்னையில்லை. அதற்கு எல்லாம் அப்பாற்பட்டு மனித உயிரின் மதிப்பை உணர்ந்தே அதனை எதிர்க்கிறோம். அந்தவகையில் பார்க்கும் போது ராஜீவ் காந்தி படுகொலையில் 26 பேர் கொலை செய்யப்பட்டனர். உயிரிழிந்த 26 பேரும் அப்பாவிகள் அப்படிப்பட்ட அந்த வழக்கையும் எதிர்த்துப் போராடி வருகிறோம். ஆணவக் கொலைக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் மரணதண்டனை தேவையில்லை. மரணதண்டனையால் குற்றம் குறைந்துவிடும் எனச் சொல்லிவிட முடியாது. நீதிபதிகளும் செய்தித்தாள்களில் வரும் செய்திகளின் அடிப்படையில் சம்பவங்களைசென்சிடிவாக அணுகுவதால் இதுபோன்ற தண்டனைகள் வழங்கப்படுகிறது’’ என்றார்  மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேனிடம் பேசினோம். ‘‘உடுமலைசங்கர் கொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை பாராட்டுகிறோம்.  இந்த வழக்கை புலனாய்வு செய்த போலீஸார் மற்றும் நீதிபதி ஆகியோருக்கு இந்தப் நேரத்தில் பாராட்டுத் தெரிவித்துக்கொள்கிறோம். கவுசல்யாவுக்கும் சாட்சிகளுக்கும் உறுதுணையாக இருந்த அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கு இந்த நேரத்தில் பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறோம். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திய தீர்ப்பு. ஆனாலும் இந்த வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் உள்ள மரண தண்டனையைப் பயன்படுத்தக் கூடாது என்று பல வருடமாகப் போராடி வருகிறோம். நாங்கள் எதிர்த்துவரும் அந்தப் பிரிவுதான் தற்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. எவ்வளவு பெரிய கொடூரமான வழக்காக இருந்தாலும் அதற்கு மரணதண்டனை தீர்வு அல்ல. மரணதண்டனை இருக்கக் கூடாது என இந்தியச் சட்ட ஆணையமே பரிந்துரைக்கும் போது எதற்கு அந்த தண்டனை என்பதுதான் கேள்வி.

#HonourKilling, #DalitRights, #UdumalaiShankarMurder


Join us for our cause