திமுக ஆட்சியில் என்கவுண்டர், மனித உரிமை மீறல்.. தமிழகம் முதலிடம்'' - 75 இயக்கங்கள் கண்டன அறிக்கை!
-மனித உரிமை மீறலில் இந்தியாவிற்கு வழிகாட்டியாகத் தமிழ்நாடு போலீஸ் திகழ்வதாக குற்றச்சாட்டு
"திமுக ஆட்சியில் நடந்த 19 என்கவுண்டரில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும், கைது செய்தபின்பு குற்றவாளிகளை காவல்துறையினர் சுட்டுக்கொல்வது அதிகரிப்பதாகவும்" பல்வேறு அமைப்புகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் 75 பேர் கையெழுத்திட்டு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
............................................
`அதிகாரத் திமிருடன் மனித உரிமை மீறல்..'
இது குறித்து சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப நாதியற்ற நிலை உள்ளது. எதிர்க்கட்சி வாய்திறக்கவில்லை, ஆளும் கட்சியின் கூட்டணிக் கட்சிகளும் கனத்த மெளனம் காக்கிறது. தமிழ்நாடு போலீஸ் தற்போது முன்னெடுக்கும் இதுபோன்ற காவல் வன்முறைகளையும், பச்சைப் படுகொலைகளையும், அதிகாரத் திமிருடன் இழைக்கப்படும் மனித உரிமை மீறல்களையும் அனுமதித்தால், சட்டத்தின் மீதான நம்பிக்கை பறிபோகும். ஜனநாயகத் தேரின் அச்சு முறியும்.
சட்டம் காக்க வேண்டிய காவல் துறையைச் சட்டம் பற்றிக் கவலைப்படாத கொலைப் படையாகப் பயன்படுத்தும் போக்கு, நமது சமூகத்தில் கட்டுக்கடங்காத விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதே இந்தியாவெங்கும் கிடைத்துள்ள பட்டறிவாகும். மாற்று அரசியலுக்கு முன்னுதாரணமாக இருக்க விரும்பும் தமிழ்நாட்டுக்கு அதிகரித்து வரும் காவல் வன்முறை ஒரு கறையாகப் படிந்து வருகிறது
