for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் இடித்ததால் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் மீனவர் ராஜ்கிரணின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3 பேரும் படகில் நடுக்கடலில் அக்டோபர் 19-ம் தேதி மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரையும் இலங்கை கடற்படையினர் மீட்டனர். இரண்டு நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார்.

இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை சர்வதேச எல்லையில், இலங்கை கடற்படை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. என்னிடமும், உறவினர்களிடமும் பெட்டியில் இருந்த உடலை முழுவதும் திறந்து காட்டாமல் அடக்கம் செய்து விட்டனர். எனவே, ராஜ்கிரண், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. போட்டோவில் அவர் முகத்தில் உடலில் காயங்கள் இருந்தது.

எனவே, இது குறித்து தமிழக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். ராஜ்கிரணின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்து எவ்வாறு இறந்தார் என்பதைக் கண்டறிய வேண்டும். உயர் காவல் அதிகாரிகள் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தெரிவிக்கையில், ‘மீனவர் ராஜ்கிரண் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அதனை எளிதாக விட்டுவிட இயலாது. உயிரிழந்த மீனவர் மனைவியின் சந்தேகங்களை தீர்ப்பது அரசின் கடமை. இறந்தவரின் உடலை மறு உடற்கூராய்வு செய்வதில் என்ன பிரச்சனை..?

தாசில்தார் முன்னிலையில், காவல்துறை பாதுகாப்புடன் நவம்பர் 18-ம் தேதி மீனவரின் உடலை தோண்டி எடுத்து கோட்டைப்பட்டினம் பகுதிக்கு அருகில் உள்ள புதுக்கோட்டை அரசு மருத்துவமனையின் தடய அறிவியல் துறை மருத்துவர் தமிழ்மணி மற்றும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் சரவணன் ஆகியோர் மீனவரின் உடலை மறு உடற்கூராய்வு செய்யவும். அதன் அறிக்கையை நவம்பர் 24-ம் தேதி தாக்கல் செய்யவும்.

உடற்கூராய்வின் போது, மனுதாரர் தரப்பில் ஓய்வுபெற்ற தடய அறிவியல் துறை பேராசிரியர் சேவியர் செல்வ சுரேஷ் உடனிருக்க அனுமதிக்கவும் உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Full Media Report



Join us for our cause