for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதற்கு எதிராக காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விதமும் பலியானோரின் புகைப்படங்களும்வெளியாகி நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. `இப்படியொரு துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்?' என்ற கேள்விகளும் எழுந்தன.

துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இதில் மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அளித்த அறிக்கையின் வழக்கை முடித்து வைத்து உத்தரவு வெளியானது. இந்த உத்தரவை எதிர்த்து மதுரையை மையமாகக்கொண்டு செயல்படும் `மக்கள் கண்காணிப்பகம்' அமைப்பின் ஹென்றி டிபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதில், `தேசிய மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என்ற கோரிக்கையை அவர் முன்வைத்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி,

நீதிபதி சிவஞானம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதுமனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், `சீலிடப்பட்ட அறிக்கையை தேசிய மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்துள்ளது. அதை வெளியிடுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்' எனக் கூறியுள்ளது. `சீலிடப்பட்ட அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என தெரிவித்தார்.

இதன்பிறகு மனித உரிமை ஆணையத்தின் அறிக்கையை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். இந்த அறிக்கையின் நகலை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலுக்கும் வழங்குமாறு உத்தரவிட்டனர்.

தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்குக்கூடுதல் இழப்பீடு வழங்கவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைக் கைவிடவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாக தெரிவித்தனர்.

பின்னர், `துப்பாக்கிச் சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு' எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ` கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசாங்கத்தில் இந்தளவு ஆதிக்கம் செலுத்தக் கூடாது எனவும் அவர்களுக்காக இப்படிப்பட்ட துப்பாக்கிச் சூடுகளை மக்கள் மீது நடத்தக் கூடாது, இப்படியொரு சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது' எனவும் கருத்து தெரிவித்தனர். மேலும், `இந்த அறிக்கையை பொதுவெளியில் வைக்கக் கூடாது' எனவும் அறிவுறுத்தினர்.

முடிவில், `துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கப்படுவதை பரிசீலிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டு, மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு விசாரணை பிரிவின் அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

Full Media Report



Join us for our cause