ஆட்சிகள் மாறினாலும் காவல்துறை அத்துமீறல்கள், காவல் நிலைய மரணங்கள், போலி மோதல் மரணங்கள் எனத் தொடர்ந்து கொண்டிருப்பதாகக் கூறும் மதுரை மக்கள் கண்காணிப்பகம், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இவ்வாண்டு ஏப்ரல் வரை 10 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சியில் ஏற்படும் காவல் நிலைய மரணங்கள் மீது உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் தவறி விட்டதாக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் குற்றம்சுமத்துகின்றனர். 'புதிய அரசு பொறுப்பேற்றவுடன் காவல்நிலைய மரணங்கள் தொடர்பாக மூன்று தீர்ப்புகள் அடங்கிய புத்தகங்களைக் கொடுத்தோம். அதன்படி, இந்த அரசு செயல்பட்டிருந்தால் காவல் மரணங்கள் தொடர்ந்திருக்க வாய்ப்பில்லை' எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓராண்டை நிறைவுச் செய்துள்ளது. இந்த ஓராண்டில் சட்டம் - ஒழுங்கைக் காப்பதில் அரசின் செயல்பாடுகள் எப்படி? நிறை, குறைகள் என்னென்ன? இனி செய்ய வேண்டியவை என்னென்ன? - இது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறார் காவல் சித்ரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கத்தின் (JA ACT) ஆலோசகரும், வழக்கறிஞருமான ஹென்றி திபேன்.