தமிழகத்தில் தொடரும் லாக்-அப் மரணங்கள்: மானாமதுரையில் போலீஸ் தாக்கியதால் இளைஞர் உயிரிழப்பு?
விசாரணைக் கைதி ஆகாஷ் டெலிசன் சிகிச்சை பலனின்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
சிவகங்கை: மானாமதுரையில் போலீசார் தாக்கியதால், 26 வயது இளைஞர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ரயில்வே காலனி பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் மற்றும் ஆதனூரை சேர்ந்த அழகர் ஆகியோரை பட்டாகத்தி மற்றும் அரிவாளால் தாக்கிய சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் வந்தது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையின்போது, இந்த வழக்கில் தொடர்புடையதாக ஆகாஷ் டெலிசன் (26) என்ற பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரை மானாமதுரை போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது, ஆகாஷ் மேலமடை மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றதாகவும், அதில் அவருக்கு காலில் முறிவு ஏற்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால், காயமடைந்த ஆகாஷ் டெலிசனுக்கு முதலில் மானாமதுரை அரசு மருத்துவமனையிலும், பின்னர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.
........................................
வழக்கறிஞர் ஹென்றி திபேன் கண்டனம்
இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில், "திருப்புவனம் அருகே மானாமதுரை காவல் நிலைய போலீசார் விசாரணையின்போது, 26 வயது பட்டியலின இளைஞர் ஆகாஷ் டெலிசன் அடித்து சித்திரவதை செய்யப்பட்டுள்ளார். அதன் விளைவாக அவர் இறந்ததாகக் கூறப்படுகிறது. மார்ச் 7ஆம் தேதி ரிமாண்ட் செய்யப்பட்ட அவர், இன்று காலையில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எனவே, இந்த சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் வழிகாட்டுதலின் படி, பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும். உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும்" எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
