மாஞ்சோலை : `அடுக்குமாடி வேண்டாம்; சமத்துவபுரம் வேண்டும்’ - தொழிலாளர்கள் வலியுறுத்துவது ஏன்?
"மலையில் சாதி, மதம் பார்க்காமல் வாழ்ந்த எங்களுக்கு சமத்துவபுரம்போல் குடியிருப்பு அமைத்துத் தரவேண்டும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், மலையிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கக் கூடாது" என்று மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்".
மாஞ்சோலையிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், மறுவாழ்வு திட்டம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மதுரை மக்கள் கண்கானிப்பக செயல் இயக்குநர் ஹென்றி டிஃபேன், வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் முன்னிலையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஹென்றி திபேன், ராபர்ட் சந்திரகுமார் பேசும்போது, "மாஞ்சோலையில் இன்னும் குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இன்றளவும் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. மற்றவர்கள் கீழே உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கி இருந்தாலும் ரேஷன் பொருட்களை வாங்க மாஞ்சோலைக்கு சென்று வருகிறார்கள். மறுவாழ்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது, இதைக் கடந்து புலிகள் காப்பக பகுதியில் என்ன மாதிரியான நடைமுறைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது.
