Press Releases
பத்திரிக்கைச் செய்தி தலித் மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த கொடுமையைச் செய்த குற்றவாளிகளைக் கைது செய்ய அரசியல் கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க மக்கள் கண்காணிப்பகம் கோரிக்கை அன்புடையீர், வணக்கம், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமம் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் வசித்து வரும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் ஆதிக்க சாதியினர் மலம் கலந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த 2022 டிசம்பர் 25 அன்று அக்கிராம மக்களுக்கு அடுத்தடுத்து திடீர் உடல்நலக் குறைவும், ஒவ்வாமையும் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குடிநீரில்தான் பிரச்னை என்று கூறியவுடன் கிராமத்தைச் சேர்ந்த சிலர், அவர்கள் பயன்படுத்திவந்த 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிப் பார்த்த போது மலம் மிதந்துகொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து 27.12.2022 அன்று மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அங்கு தேநீர்க் கடையில் இரட்டைக் குவளை முறை உள்ளதையும், கோவில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதையும் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அடுத்து கோட்டாட்சியர் குழந்தைசாமி பாதிக்கப்பட்ட மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தி குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் சம்பவம் நடந்து சுமார் 15 நாட்கள் கடந்த நிலையில் இது வரை குற்றவாளிகள் கைது செயயப்படாமல் இருப்பது ஏன்? மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், மாநில மனித உரிமைகள் ஆணையம், மாநில பெண்கள் உரிமை ஆணையம் போன்றவை இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது ஏன்? அரசு சாரா அமைப்புகள் தான் இது பற்றி பேசி வருகின்றன. 21 ஆம் நூற்றாண்டிலும் சாதிய வன்மத்துடன் தொடரும் இக்கொடூரத்தை அரசியல் கட்சிகள் உடனடியாகக் கண்டனம் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இத்துடன் குற்றவாளிகள் கைது செய்யப்படவும், கிராமத்தில் அமைதியான சூழல் நிலவவும் அரசியல் கட்சிகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுகிறோம். இச்சம்பவம் குறித்து ஒரு நீதிபதி தலைமையில் இரண்டு வழக்கறிஞர்கள் விசாரணை நடத்துவது பாராட்டிற்குரியது ஆகும். இப்படிக்கு ஹென்றி திபேன் நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். ஜூலை 13 அன்று காலை அப்பள்ளி விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பிலும், காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்யச் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் அவர்கள், ஆசிரியர்கள் மாணவியை படிக்கச் சொல்லி அழுத்தம் கொடுத்ததாலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி மாணவி எழுதியதாக தற்கொலைக் கடிதம் ஒன்றையும் உறவினர்கள் முன் படித்துக் காட்டியுள்ளதாக அறிய முடிகிறது. அந்த கடிதத்தின் அடிப்படையில் அப்பள்ளி கணித ஆசிரியர் வசந்த், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ........................ மக்கள் கண்காணிப்பகம் முன்வைக்கும் பரிந்துரைகள்: தமிழக மாநில மனித உரிமை ஆணையமும், மாநில குழந்தை உரிமைகள் ஆணையமும், மாநில பெண்கள் ஆணையமும் கூட்டாக இணைந்து மாணவி மரணம் குறித்து முழுமையான ஆய்வினை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு உண்மையாக நடந்தவை என்ன என்பதை அறியும் உரிமை உண்டு. காவல்துறையின் இறுதிக்கட்ட நடவைக்கைகள் மக்களின் உண்மை அறியும் தாகத்தை தணிக்கவில்லை, நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. ஆகவே தான் சட்டப்படி நிறுவப்பட்டுள்ள ஆணையங்கள் கூட்டாக இணைந்து உண்மை நிலையை கண்டறிந்து பொதுவெளிக்கு அறிவிப்பதும், சட்டரீதியான நடவடிக்கையை உறுதி செய்வதும் அவசியமாகிறது. இந்த சூழலை கவனத்தில் கொண்டு, மேற்கண்ட மூன்று ஆணையங்களின் தலைவர்கள் தலைமையில் ஒரு உயர்மட்ட உண்மையறியும் குழு உடனடியாக ஏற்படுத்தப்பட்டு விசாரணையை துரிதமாக தொடங்க வேண்டும். இக்குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற காவல்துறை உயர் அலுவலர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரை இணைத்து இந்த ஆய்வினை முன்னெடுக்க வேண்டும். ஜூலை 13 முதல் – ஜூலை 16 வரை உயர் காவல்துறை அலுவலர்கள், உயர் கல்வித்துறை அலுவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? அவர்களின் அலட்சியமே ஜூலை 17 வன்முறைக்கு காரணமாக இருக்குமோ என்று சந்தேகிக்க முடிகிறது. இவர்கள் மீதான கவனக்குறைவு குறித்து சிறப்பு விசாரணையை மாநில மனித உரிமை ஆணையம் நடத்திட வேண்டும்.
People's Watch is attested : JOINT STATEMENT OF DEMOCRATIC GROUPS AND CONCERNED CITIZENS - FREE JOURNALIST MOHAMMAD ZUBAIR NOW!
People’s Watch has been deeply disturbed by the state of incidents of custodial torture and violence including those leading to deaths that have shaken the conscience of, well-meaning citizens, the government including different sections of the police itself. ...
41 வழிகாட்டல் நெறிமுறை நடவடிக்கைகளை” அண்மையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஜூன் 14, 2022 தேதியிட்ட சுற்றறிக்கையில் வெளியிட்ட தமிழக காவல்துறை தலைமை இயக்குனருக்கு மக்கள் கண்காணிப்பகத்தின் பாராட்டுக் கடிதம் மரணத்தை விளைவிக்கும் காவல் சித்திரவதை, காவல் வன்முறை போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நிகழும் போதெல்லாம் மக்கள் கண்காணிப்பகம் பெரிதும் கவலை கொண்டது. இந்நிகழ்வுகள் மனிதநேயம் மிக்க காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட குடிமக்களின் மனசாட்சியை வெகுவாக உலுக்கியது. இத்தகைய இடர்மிகு நேரத்தில் தாங்கள் சரியான முடிவெடுத்து “41 வழிகாட்டல் நெறிமுறை நடவடிக்கைகளை” சுற்றறிக்கை மூலம் வெளிப்படையாக அறிவித்தது போற்றுதலுக்குரிய செயலாகும். இந்த சுற்றறிக்கையை மிகவும் உன்னிப்பாகப் படித்த போது தமிழ்நாட்டில் அண்மையில் நடந்த காவல் மரணங்களே இதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
தமிழகத்தில் காவல் மரணம் தொடர்வதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் அப்பு (எ) ராஜசேகர் காவல் மரண வழக்கை தாமாக முன் வந்து (Suo-Moto) தன் வழக்காக எடுத்து அதன் விசாரணையை கண்காணிக்க வேண்டும். சம்பவ நாளன்றே தொடர்புடைய காவலர்களை பணியிடை...
உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒமைக்ரான் தொற்று இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. எனவே இதன் பரவலைத் தடுக்க தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு விதிமுறைகளை விரைந்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. பள்ளிகள், நீதிமன்றங்கள் மூடப்பட்டு இணையவழியில் நடைபெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. போராட்டங்கள், பொது கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய முன்னெச்சரிக்கைச் செயற்பாடுகளை மக்கள் கண்காணிப்பகம் வரவேற்கிறது. அதே நேரத்தில் இந்நெறிமுறைகளை மீறும் சிலவற்றையும் சமூக அக்கறையுடன் சுட்டிக்காட்டுகிறது. பள்ளிகள் மூடப்படும் நேரத்தில் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் ஏன் நடத்தப்படுகின்றன? ஒருபக்கம் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு எல்லாவற்றையும் மூடுங்கள் என்று உத்தரவிடும் அரசு மறுபக்கம் மதுரைக்கும், தென் மாவட்டங்களுக்கும் பிரதமர் வருகை, முதல்வர் வருகை என மக்கள் கூட்டத்தைக் கூட்ட முயற்சிப்பது முரண்பாடாக உள்ளது. ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவுகிறது என்பது உண்மை என்றால் பெருந் திரளாய் மக்களைக் கூட்டும் அரசியல் நிகழ்ச்சிகளும் கண்டிப்பாக தேவையற்ற ஒன்றாகும். எனவே மக்கள் கூடும் பொது நிகழ்வுகளிலும், அரசியல் நிகழ்வுகளிலும் தமிழக முதல்வரும், அமைச்சர்களும் பங்கேற்க மாட்டார்கள் என்று அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இதே போன்று மக்களை நேரிடையாகச் சந்தித்து வாக்கு சேகரிக்கும் நகராட்சி, மாநகராட்சி தேர்தல் பணிகளையும், இதே காரணத்திற்காக கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இயல்பு வாழ்க்கை திரும்பும் வரைத் தள்ளிப்போடுவதில் எந்த அச்சமும், ஆளுங் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இருக்கக் கூடாது. மக்களின் உடல் நலனே நமது முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும் சூழலில் பாரதிய சனதா கட்சி சார்பில் மதுரையில் பொங்கல் விழா கொண்டாடப்படும், அதில் பாரத பிரதமர் கலந்து கொள்வார் என்று கூறும் அதே நேரத்தில், இத்தகைய நிகழ்வு ஒமைக்ரான் பரவலை அதிகப்படுத்தும் என்பதில் அக்கட்சியினர்க்கே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆகவே தயை கூர்ந்து அக்கட்சியின் பொறுப்பாளர்கள் இந்நிகழ்வைத் தடுத்து, ஒமைக்ரான் கட்டுப்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பொங்கல் விழாவின் போது பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடு பிடிப்பவர்கள், மாடு விடுபவர்கள், உள்ளூர் மக்கள், பல்துறை அதிகாரிகள் போன்றோர்க்கு மட்டும் சிறப்பு அடையாள அட்டையுடன், தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்க வேண்டும். மற்றவர்கள் நிகழ்ச்சியைக் காண தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய அரசே அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இதே போன்று கிராமங்கள், நகரங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் அதன் நிர்வாகிகள் தாமாக முன்வந்து கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது போல் வெளிமாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் முறையான தடுப்பூசி போடப்பட்டிருப்பதையும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவதையும் கண்டிப்பாக உறுதி செய்ய அனைத்து மாநில எல்லைகளிலும் அதிகாரிகளையும், மருத்துவர்களையும் நியமனம் செய்து தமிழ் நாட்டை காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதை வலியுறுத்துகிறோம். இதே போன்று எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களும் மத நிகழ்வுகளை நடத்தும்போது கூட்டம் சேர்வதைத் தவிர்க்கும் நடைமுறையை ஒமைக்ரான் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை தாமாகவே முன் வந்து கடைப்பிடிக்க வேண்டும். ஏற்கெனவே அங்கீகாரம் பெற்றிருக்கும் மருத்துவ கல்லூரிகளை முறையாகத் திறந்து வைக்க வருகிற 12.1.2022 அன்று பாரதப் பிரதமர் விருதுநகர் வருகிறார் என்று பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. இதற்காக ஹெலிகாப்டர் இறங்குதளத்திற்கான இடத்தைத் தெரிவு செய்யும் பணியில் தமிழக அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஒமைக்ரான் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் பாரத பிரதமரும், தமிழ் நாடு முதல்வரும் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு ஒமைக்ரான் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை இந்நிகழ்வுகளை ஒத்தி வைத்து இயல்பு வாழ்க்கை திரும்பிய பின் இந்நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். சாதரணமாக மக்கள் அதிக அளவில் கூடுகின்ற பகுதிகளில் அரசதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மட்டுமில்லாமல் குடிமைச் சமூக அமைப்புகள், வியாபாரிகள் (காய்கறி, பூ, ஜவுளி,மீன்) சங்கங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் போன்றவை தாமாக முன்வந்து மக்கள் அதிக அளவில் மக்கள் கூடுவதைக் கண்டிப்புடன் தவிர்க்க வேண்டும். முகக் கவசம் அணிதல், கிருமினாசினியால் கைகளைச் சுத்தப்படுத்துதல் போன்றவற்றைப் பயன்படுத்தும் தமிழகமாக, அரசிற்கும், காவல்துறைக்கும் முழுமையாக ஒத்துழைப்பு கொடுப்பவர்களாக அனைவரும், அனைத்துக் கட்சிகளும், குடிமை சமூகங்களும், இயக்கங்களும் இணைந்து ஒமைக்ரான் பரவலைத் தடுக்க வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கேட்டுக் கொள்கிறது. இப்படிக்கு, ஹென்றி திபேன் நிர்வாக இயக்குநர் மக்கள் கண்காணிப்பகம்
22.12.2021 PRESS RELEASE People’s Watch welcomes the order of the SHRC and appeals for zero tolerance to violence by uniformed services People’s Watch has the greatest pleasure to welcome and acknowledge the Tamil...
திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குற்றவாளிகளால் படுகொலை செய்யப்பட்டதை மக்கள் கண்காணிப்பகம் வன்மையாகக் கண்டிக்கிறது! கடந்த 21.11.2021 அன்று ஆடு திருடிய கும்பலை விரட்டிப் பிடித்த நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் அக்கும்பலால் பட்டப்பகலில் பொது வெளியில் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் வன்மையான கண்டனத்திற்குரியதாகும். சிறாராக இருந்தாலும், இளைஞராக இருந்தாலும் வன்முறையைப் பயன்படுத்துவது, அதிலும் கொலைக் குற்றத்தில் ஈடுபடுவது சட்டத்தின் ஆட்சியை மதிக்கும் நாட்டில் எந்த வகையிலும் ஏற்புடையதல்ல, நியாயத்திற்குப் புறம்பானது ஆகும். எந்தப் பிரச்சனைக்கும் வன்முறை தீர்வல்ல என்பதில் முழு நம்பிக்கை கொண்ட குடிமைச் சமூகமும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் இத்தகைய வன்முறையை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள். காவல் வன்முறைக்கு எதிராகச் சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டு களப்பணியாற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் காவல்துறையினர் மீது நடத்தப்பெறும் வன்முறையையும் கண்டிக்க ஒரு போதும் தவறியதில்லை; தவறவும் மாட்டோம். இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 இன் படி அனைத்து மக்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படுதல் கூடாது. அனைத்து மக்கள் என்பதில் காவல்துறையினரும் அடங்குவர். அனைவரின் வாழ்வுரிமையும் பாதுக்காக்கபெற வேண்டும். இது எவர்க்கும் மறுக்கப்படக் கூடாது. ஒருவர் உயிரைப் பறிக்க எவர்க்கும் அதிகாரமில்லை. இது போன்ற கொடூர குற்றங்கள் செய்வோர்க்கு எதிராக விரைவான, முறையான, தரமான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குறுகிய காலத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விரைவான தீர்ப்பு வழங்கப்பெற வேண்டுமென மக்கள் கண்காணிப்பகம் வேண்டுகிறது. திருட்டுக் கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக இழப்பீடு கொடுத்துள்ளது. அதே நேரத்தில் நீதியும் கிடைக்கச் செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விரைவாக அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக மரணத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தும் வன்முறைக் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறுவதைத் தவிர்க்க வேண்டும். மலேசிய நாட்டில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் திரையிடப்படும் தமிழ்ப் படங்களில் வன்முறைக் காட்சிகளைத் துண்டித்து வெளியிட்டுத் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஆயுதக் கலாச்சாரமும் வன்முறையும் பொருந்தாது என்பதை இன்று வரை நிறுவி வருகிறார்கள். இதன் மூலம் தமிழர்களின் பண்புகளை, வாழ்வியல் நெறிமுறைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுத்து மனித குலத்திற்கு எடுத்துரைக்கிறார்கள். இது போன்ற வன்முறைகளை மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கண்டிப்பதில்லை என்று கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது ஆகும். வன்முறை யார் மீது நிகழ்த்தப்பெற்றாலும் அதை மனித உரிமை அமைப்புகள் ஒரு போதும் கண்டிக்கத் தவறியதில்லை. வன்முறையை யார் பயன்படுத்தினாலும் அது வன்முறை தான், வன்முறையாளர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கபெற வேண்டும் என்று மக்கள் கண்காணிப்பகம் கோருகிறது. ஹென்றி திபேன் நிர்வாக இயக்குநர், மக்கள் கண்காணிப்பகம்
பத்திரிக்கைச் செய்தி ஸ்ரீபெரும்புதூரில் முதல் காவல் கொலை! தூத்துக்குடியில் இரண்டாவது காவல் கொலை! தமிழக காவல்துறைக்கு சுடுவதற்கு கற்றுக் கொடுக்கவேண்டுமா? தூத்துக்குடியில் சரியாக மக்களை சுட்டவர்களுக்கு, காவல்துறை எப்படி சுடவேண்டும் என கற்றுக்கொடுக்க வேண்டுமா? இடுப்பிற்குக்...