for query : info@peopleswatch.org

Home
A program unit of Centre
for Promotion of Social Concerns

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த ஆறா வடு!..– உயர்நீதிமன்றம் கருத்து…

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் குண்டுகளுக்கு இரையாகிப்போனர். இந்நிலையில், இத்துப்பாக்கிச் சூட்டை தாமாக விசாரிக்க முன்வந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், ஆணையத்தின் புலனாய்வுத்துறை அறிக்கையின் படி வழக்கை முடித்து வைத்தது. 

இந்நிலையில், முடித்து வைக்கப்பட்ட இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி  ஹேன்றி திபென் என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி தலைமை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரரான ஹென்றி திபென், தேசிய மனித உரிமை ஆணையம், சீல் வைத்து தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை வெளியட பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும், அவ்வறிக்கையை வெளியிட ஆணையத்துக்கு உத்தரவிடுமாறும் கோரினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நீதிபதிகள், இவ்வழக்கின் அறிக்கை நகலை மனுதாரருக்கும், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கும் வழங்க மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டு, பொதுவெளியில் அறிக்கையை வெளியிடக்கூடாது என அறிவுறுத்தியதோடு, பாதிப்புள்ளானவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும், அவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்பபெறவும் அரசுக்கு பரிந்துரைப்பதாகவும் தெரிவித்தனர். 

இந்த துப்பாக்கிச்சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு எனக்கூறிய நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது எனவும், ஆட்சி அதிகாரத்தில் கார்ப்பரேட் இந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்த இடமளிக்கக்கூடாது  எனவும் அறிவுறுத்தி, இதுபோன்ற சம்பவங்கள் இதுபோல் மீண்டும் நடந்துவிடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசை பரிசீலிக்குமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், இவ்வழக்கில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையையும், ஆணையத்தின் புலானாய்வு துறை அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை நான்கு வார காலத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.

 

Full Media Report



Join us for our cause